மே 24, 2009

அளபெடை:

மாத்திரை:
கண் இமைக்க எடுத்துக் கொள்ளும் நேரம் அல்லது கைநொடிக்கும் நேரமே மாத்திரை ஆகும்.
குற்றெழுத்துகள் ஒரு மாத்திரையும், நெட்டெழுத்துகள் இரண்டு மாத்திரைகளும், மெய்யெழுத்து மற்றும் ஆய்தஎழுத்து அரை மாத்திரையும் பெரும்.

அளபெடை:

செய்யுளில் ஓசை குறையும் போது சீரும், தளையும் சிதைந்து இலக்கணக்குற்றம் உண்டாகும். அதனை நிறைவு செய்வதற்காக ஒரு சொல்லின் முதல், இடை, கடை என்ற மூவிடத்திலும் நிற்கும் நெட்டெழுத்துகள், தமக்குரிய இரண்டு மாத்திரை அளவைக் கடந்து ஒலிக்கும். நெட்டெழுத்து நீண்டு ஒலிக்கிறது என்பதை அறிவிக்க அதன் இனமாகிய குற்றெழுத்து அதன் பக்கத்தில் வரி வடிவில் எழுதப்படும்.
நெட்டெழுத்து நீண்டு ஒலிப்பது அளபெடையாகும்.

அளபெடையின் வகைகள்:
1. உயிரளபெடை
2. ஒற்றளபெடை

உயிரளபெடை:

உயிர் நெட்டெழுத்துகள் செய்யுளில் ஓசை குறையும் போது ஓசையை நிறைப்பதற்காக நீண்டு ஒலிப்பது உயிரளபெடை ஆகும்.

எ.கா.:
கெடுப்பதூஉம்

வகைகள்:
அ. செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை
ஆ. இன்னிசை அளபெடை
இ. சொல்லிசை அளபெடை

செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை:

செய்யுளில் ஓசை குறையும் போது நெட்டெழுத்துகள், தனக்குரிய இரண்டு மாத்திரை அளவைக் காட்டிலும் மூன்று மாத்திரை அளவாய் ஒலிக்கும்.

எ.கா.:
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னும் அவர்.

இன்னிசை அளபெடை:
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிமையான ஓசையைத் தருவதற்காக ஒரு குற்றெழுத்து நெட்டெழுத்தாக நீண்டு அளபெடுக்கும்.

எ. கா.:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றறாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.

சொல்லிசை அளபெடை:
செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் சில சமயங்களில் ஒரு பெயர்ச்சொல் அதனுடன் தொடர்புடைய வினையெச்ச பொருள் தருமாறு மாற்றுவதற்காக அளபெடுத்து வருவதாகும்.

ஒற்றளபெடை:
செய்யுளில் ஓசை குறையும் போது தனிக்குறிலை அல்லது குறில் இணையை அடுத்து வரும் ஒற்றெழுத்து அளபெடுத்து ஓசையை நிரப்புவது ஒற்றளபெடை ஆகும்.

ஏப்ரல் 10, 2009

இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே
எள்ளின் றாகில் எண்ணையும் இன்றே
எள்ளினுள் எண்ணை எடுப்பது போல்
இலக்கியத்தினின்றும் எடுபடும் இலக்கணம்.

-என்ற பாடல் வரிகளின் மூலம் இலக்கணமும் இலக்கியமும் பிரிக்க முடியாத ஒன்று என்பதை
அறியலாம்.

மார்ச் 28, 2009

எழுத்துக்கள்

மொழி:
ஒருவர் தமது கருத்தை பிறரிடம் பகிரிந்து கொள்ள உதவும் கருவியே மொழி. அங்ஙனம் பகிர்தல் இரண்டு வடிவங்கள் பெரும். அவை, வரி வடிவம், ஒலி வடிவம்.

ஒலி – ஒருவர் பேசுவதால் உண்டாகும் ஓசையே ஒலி.

அவ்வோசைக்கு கொடுக்கப்படும் வரி வடிவமே எழுத்து.

தமிழ் எழுத்துக்கள்:
உயிர் எழுத்துக்கள் (12), மெய் எழுத்துக்கள்(18), உயிர்மெய் எழுத்துக்கள்(216), ஆய்த எழுத்து(1) ஆக 247 எழுத்துக்கள்.

உயிர் எழுத்துக்கள்:
தமிழ் மொழிக்கு உயிர் நாடியாய் விளங்கும் ‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள். ஓசையின் மூல காரணமாய் விளங்குவதாலும் இவை உயிர் எழுத்துக்கள் எனப்பட்டன.

இவற்றுள்
அ, இ, உ, எ, ஒ – ஆகிய குறுகிய ஓசை உடைய எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்பர்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ – ஆகிய நெடிய ஓசை உடைய எழுத்துக்களை நெடில் எழுத்துக்கள் என்பர்.

மெய் எழுத்துக்கள்:
உயிர் இல்லாத உடம்பு(மெய்) ஆற்றலற்றது. அது போல், தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமலும் உயிர் எழுத்துக்களின் துணை கொண்டு இயங்கும் எழுத்துக்கள் ஆதலில் இவை மெய் எழுத்துக்கள் எனப்பட்டன. இதனை ஒற்று எழுத்து என்றும் அழைப்பர்.

உயிர்மெய் எழுத்துக்கள்:
உயிர் எழுத்து பனிரெண்டும், மெய் எழுத்து பதினெட்டும் சேர்ந்து உருவாகும் 216 எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள்.
எ.டு. க் + அ = க.

ஆய்த எழுத்து:
ஃ – இதுவே ஆய்த எழுத்து.

தமிழ் எழுத்துக்கள்:

உயிர்

மெய்

க் கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ
ச் சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ
ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ
ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ
ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ
த் தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ
ந் நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ
ப் பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ
ம் மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ
ய் யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ
ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ
ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ
வ் வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ
ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ
ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ
ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ
ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ

மார்ச் 23, 2009

குறிசொற்கள்

தமிழ் இலக்கணத்தைப் பற்றி அறியும் முன் அதில் கையாளப்படும் சில சுவையான சொற்களைப் பற்றி தெரிந்து கொள்ளல் அவசியம். பின்வரும் பகுதிகளை பற்றி அறிந்து கொண்டால் தமிழ் இலக்கணத்தின் சிறப்புகளையும் அதன் தேவையையும் உணரலாம்.

அவையாவன:

  1. எழுத்து
  2. சொல்
  3. பொருள்
  4. யாப்பு
  5. சீர்
  6. அடி
  7. தொடை
  8. எதுகை
  9. மோனை
  10. அணி
  11. உவமை
  12. உவமேயம்
  13. தேமா
  14. புளிமா

மேற்கண்ட குறிசொற்களை பற்றிய விளக்கத்தையும் அதன் பயன்பாட்டயும் அடுத்த இடுகையில் அறியலாம்.

மார்ச் 23, 2009

வணக்கம்

வணக்கம்!  

தமிழ் இலக்கணத்திற்கென ஓர் வலைத்தளம். ஓர் ஆரம்பம். 

தமிழ் மொழியின் அழகை, அதன் மேன்மையை பறைசாற்றும் வகையில் ஒரு வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே இந்த வலைப்பூ.

இலக்கணம் - மொழியை பிழையில்லாமல் பேசுவதற்கும் எழுதுவதற்கும் உதவுவதே இலக்கணம்.

வரும் பிரதிகளில் இதனை விரிவாகக் காண்போம்.